ஆழியாறு மீன் வளர்ச்சி கழகம் சார்பில் ஆழியாறு அணையில் 1 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டது
ஆழியாறு மீன் வளர்ச்சி கழகம் சார்பில் ஆழியாறு அணையில் 1 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டது.
பொள்ளாச்சி அருகே ஆழியாறு மீன் வளர்ச்சி கழகம் சார்பில் நுண் மீன் வளர்ப்பு பண்ணை செயல்பட்டு வருகிறது. மணிமுத்தாறு, மேட்டூர், பவானியில் இருந்து நுண் மீன் குஞ்சுகள் வாங்கி வந்து வளர்க்கப்படுகிறது. நுண் மீன் குஞ்சிகளை விரலிகளாக மாற்றி 10 செ.மீ. நீளத்துக்கு வளர்க்கப்படுகிறது. கடலை புண்ணாக்கு, நெல் தவிடு ஆகியவை மீன்களுக்கு உணவாக கொடுக்கப்படுகிறது. மீன்கள் 10 செ.மீ. வளர்ந்ததும் ஆழியாறு உள்ளிட்ட அணைகளில் இருப்பு வைக்க வழங்கப்படுகிறது.
இதையடுத்து, ஆழியாறு மீன் வளர்ச்சி கழக மேலாளர் சுகுமார், துணை மேலாளர் மாசிலாமணி ஆகியோர் முன்னிலையில் 1 லட்சம் மீன் குஞ்சுகள் ஆழியாறு அணையில் விடப்பட்டன.
இதுகுறித்து மீன் வளர்ச்சி கழக அதிகாரிகள் கூறியதாவது:-
பவானி, மேட்டூர், மணிமுத்தாறு ஆகிய பகுதிகளில் உள்ள தாய் மீன்கள் பண்ணையில் இருந்து மிர்கால், கட்லா, ரோகு ஆகிய நுண் மீன் குஞ்சுகள் கொண்டு வரப்பட்டு வளர்க்கப்படுகின்றன. தற்போது அவற்றை அணையில் இருப்பு வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது, 1 லட்சம் மீன் குஞ்சுகள் ஆழியாறு அணையில் விடப்பட்டு உள்ளன.
தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் ஆழியார் அணையில் உள்ள மீன்களைப் பிடித்து விற்பனை செய்ய ஒப்பந்தருக்கு பொது ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.60 நாட்களுக்கு பிறகு ஒரு கிலோ எடையுடைய வளர்ந்த மீன்களை பிடித்து மீன் வளர்ச்சி துறை மூலமாக பொதுமக்களின் உணவு தேவைக்கு வினியோகம் செய்யப்படும். இந்த மீன்களை வாங்க உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூரிலிருந்து அதிகளவில் அசைவ பிரியர்கள் வந்து வாங்கி செல்வார்கள். அணையில் பிடிக்கப்படும் மீன்களை ஒரு கிலோ 170 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.