Type Here to Get Search Results !

ஆனைமலை காடு: வால்பாறை பிறந்தது எப்படி? வரலாற்றை பார்ப்போம். #Valparai_History #Anaimalai_Forest

ஆனைமலை காடு: வால்பாறை பிறந்தது எப்படி?  வரலாற்றை  பார்ப்போம். 

                                                                   -மா.வெற்றிவேல் 


ஆகஸ்ட் 02.,


                  இன்றைய வால்பாறை தொடக்கத்தில் பூனாச்சி மலை என்ற பெயர்தான் இருந்து உள்ளது.  ஆனைமலை காடுக்கு வந்த ஆங்கிலேயர்கள், நவமலை வழியாக சமவெளியில் பாயும் ஆழியாறு ஆற்றுக்கு பின்னால் இருந்த மலைகளில் வாழ்ந்துவந்த மலைவாழ் மக்களான பழங்குடிகள் "புலையர்" சமூகத்தை சேர்ந்த பூனாச்சி என்பவர் இந்த மலைகள் வழியாக ஆங்கிலேயர்களை வழிகாட்டி அழைத்துச் சென்றிருக்கிறார். அவரை நினைவு கூறும் வகையில் அவருடைய பெயரோடு மலையை சேர்த்து "பூனாச்சி மலை" என அழைக்கப்பட்டுள்ளது. 



              இயற்கை எழிலோடு பசுமையான காடுகள் வழியாக செல்லும் பாதைகளில் யானைகள், கூட்டம் கூட்டமாக அலைமோதும் என்றும், சில காடர் பழங்குடிகள் மட்டுமே வசிக்கின்றனர் எனவும், 1850 களுக்கு முன்பு வால்பாறை குறித்து ஆங்கிலேயர்களின் குறிப்புகளில் இடம்பெற்றுள்ளது.  மேலும் ஆனைமலை காடுகளில், டாப்சிலிப் போன்ற பகுதிகளில் உயர்ந்து வளர்ந்திருக்கும் வலிமையான தேக்கு மரங்களுக்காக ஆங்கிலேயர்கள் காடுகளை அழித்தனர். 



          ஆனால், பூனாச்சி மலையில் தேக்கு மரங்கள் குறைவான எண்ணிக்கையில் இருந்ததாலும், பயன்பாட்டிற்கு உகந்ததாகவும் இல்லாததால் காடழிப்பில் இருந்து சிறிது காலம் பூனாச்சி மலை தப்பியிருந்தது. இருந்தாலும்,தேயிலையை பயிரிட முடிவு செய்ததால் பூனாச்சி மலையும் காடழிப்புக்கு உள்ளானது.



காட்டுயிர்களின் உணவு பஞ்சம்...


                    1850களுக்கு முன்பு ஆனைமலை காடுகளில் யானைகள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வந்துள்ளது. பறந்துவிரிந்து  பசுமையோடு காட்டுயிர்களின் உணவு பெருக்கத்தின் உச்சத்தில் இருந்த காடு ஒருநாள் நம்மைவிட்டு போகுமென்று தெரியாத காட்டுயிர்களுக்கு ஆங்கிலேயர்களால் வந்தது சோகம். அன்று ஆங்கிலேயர்களால்  காடுகளை அழித்தனால் வந்தவிளைவு, அந்த காட்டுயிர்கள் இன்றளவும் உணவிற்கான போராட்டம் நிற்கவில்லை என்பதுதான் இதில் வேதனையான உண்மை. பசுமையான காடுகளை அழித்தனால் காட்டுயிர்களின் உணவு சங்கலி தொடர்பை இழந்தது. 



                        ஆனால், இயற்கையின் பேராற்றலால் காட்டுயிர்களுக்கான உணவு சங்கலி தொடர்பு புத்துணர்வு பெற்றது. இருப்பினும் பெருமளவு காடுகளை அழித்ததால் காட்டுயிர்களின் உணவு பஞ்சம் இன்றுவரை தீரவேயில்லை. மனித-விலங்கு மோதல் உருவாக இதுவும் ஒரு காரணம். பறந்துவிரிந்தகிடந்த காடுகளின் பரப்பளவை குறைத்து இருக்கிறது. காட்டுயிர்களின் உற்பத்தி பெருமளவு உயர்ந்து இருக்கிறது. இதனால், காடுகளில் உணவு பற்றாக்குறையால்  உணவைத்தேடி விலங்குகள், மனிதர்கள் வாழும் பகுதிகளுக்கு இடம்பெயர தொடங்கியது. 



         யானைகள், புலிகள், சிறுத்தைகள், கரடிகள், குரங்குகள் போன்ற விலங்குகள் மனிதர்களோடு மோதுவது ஏனென்று இப்பொழுது புரிகிறதா?.  



வால்பாறைக்கு தேயிலை வந்தது எப்படி ?


                  ’ஷென்னோங்’ என்ற சீன புத்தபிக்குவின் வெந்நீர் கோப்பையில் விழுந்த தேயிலையில் இருந்து முதல் தேநீர் உருவானது என்னவோ தற்செயலானது தான். அதன்பின்னர், தேநீர் திட்டமிட்ட உழைப்பினால் உலகம் முழுவதும் பரவியது. சீனாவில் இருந்து திருட்டுத்தனமாக தேநீர் உற்பத்தியை கற்றுக்கொண்ட பிரிட்டிஷ்காரர்கள், இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தேயிலையை பயிரிட்டனர். அதில், கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் இருந்த வால்பாறையும் ஒன்று. இதற்கு, இப்பகுதியில் நிலவிய குளிர்ச்சியான தட்ப வெப்ப நிலைதான் அதற்கு முக்கியக் காரணமாக இருந்தது.



                   வால்பாறை பகுதியில் தேயிலைக்கு முன்பாக, காபி பயிரிடப்பட்டது. 1848ஆம் ஆண்டில், கோபால்சாமி முதலியார் என்பவர் காபியை  பயிரிட்டார். அதனைத்தொடர்ந்து கர்னாடிக் கம்பெனி 1864லில் காபி செடியை பயிரிட்டது. ஆனால், காபி பயிரிடதில் எதிர்பார்த்தபடி வளரவில்லை. மேலும், பெரும் நஷ்டமும் ஏற்பட்டது. இதையடுத்து, வால்பாறைக்கு தேயிலையை பயிரிட கொண்டு வரப்பட்டது. 1860களில் காடுகள் அழிக்கப்பட்டு தேயிலை செடிகள் பயிரிடப்பட்டன.



                   இதற்கிடையில், இங்கிலாந்து விக்டோரியா மகாராணியின் முதல் மகனும், பிரிட்டிஷ் இந்தியாவின் மகாராஜாவும், வேல்ஸ் இளவரசனுமான ஏழாம் எட்வர்டு, வால்பாறை வருவதாக இருந்தது. தற்போதுமுள்ள அக்காமலை புல்வெளிகளில் வந்து தங்கியிருந்து, விலங்குகளை வேட்டையாட திட்டமிடப்பட்டு. இதற்கு குதிரைகள், யானைகளை பயன்படுத்தி பணிகள் நடந்தன. 



       இதற்காக, ஆங்கிலேயர்கள் தங்கியிருந்த பகுதியின் பெயர்  'ஆங்கிலக்குறிச்சி கேம்ப்' என்று அழைக்கப்பட்டது. அதுதான்  இப்போது உள்ள "அங்கலக்குறிச்சி" என்று அழைக்கப்படுகிறது. இதையடுத்து, மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் 'ஏழாம் எட்வர்டின்' குதிரையில் செல்வதற்காக, மலைகளை வெட்டி வெட்டி, வளைந்து நெளிந்து செல்லும் பாதை உருவாக்கப்பட்டது. ஆனால், இறுதி நேரத்தில் 'ஏழாம் எட்வர்டு' பயணத்திட்டம் கைவிடப்பட்டது. ஆனால், அவருக்காக போடப்பட்ட "குதிரைப்பாதை" தான் இன்று, 40 கொண்டை ஊசி வளைவுகளுடன், வளைந்து நெளிந்து செல்லும் வால்பாறை சாலையாக மாறியிருக்கிறது.



                      1890ஆம் ஆண்டில், மெட்ராஸ் மாகாணத்திடம் இருந்து விண்டில், நோர்டான் என்ற, இரண்டு பிரிட்டிஷ்க்காரர்கள் யாருக்கும் பயன்படாத நிலம் எனக்கூறி ஒரு ஏக்கருக்கு 5 ரூபாய் கொடுத்து நிலங்களை வாங்கினர். இதையடுத்து, இங்கிலாந்தில் இருந்து காபி, தேயிலை விவசாயத்தில் நிபுணராக இருந்த, "கார்வெர் மார்ஷ்" மாதம் 250 ரூபாய் ஊதியம் கொடுத்து இந்த காட்டிற்கு வரவழைக்கப்பட்டார். இப்போதும், கவர்க்கல் பகுதியில், கையை நீட்டியபடி இருக்கும் சிலை "கார்வெர் மார்ஷ்" அவர்களுடையது தான். இவர்தான், மழைக் காடுகளை அழித்து, தேயிலை பயிரிட முதல் காரணமாக இருந்தார். 






                          இதற்கு பின்னர்தான், காட்டுயிர்கள் வாழ்ந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு, பல்வேறு எஸ்டேட்கள் உருவாக்கப்பட்டது. எஸ்டேட்களில் பணி செய்வதற்கு கோவை, மதுரை, திருநெல்வேலி, சேலம் போன்ற மாவட்டங்களில் இருந்து, தொழிலாளர்கள் வால்பாறைக்கு கொண்டு வரவழைக்கப்பட்டனர். வால்பாறையில் தேயிலை உள்ளிட்டவற்றை தரைப்பகுதிக்கு கொண்டு செல்ல, அய்யர்பாடி பகுதியில் ஒரு "ரோப் வே" என்ற கம்பிவழி சரக்கு கடத்தி, பயன்பாட்டில் இருந்திருக்கிறது. 



                  மேலும், 1920லில் மின்சார வாரியம், அட்டக்கட்டி முதல் வளைவிலிருந்து வாட்டர்பால் எஸ்டேட் வரை மின்சாரக் கம்பி அமைத்துள்ளார்கள். அங்கிருந்து அய்யர்பாடிக்கு தூண் கட்டி, ஆழியாரிலிருந்து மின்சாரம் கொண்டுவந்த, அதே பாதையைப் பயன்படுத்தி, "ரோப் வே" என்ற கம்பிவழி சரக்கு கடத்தி உருவாக்கியுள்ளார்கள். சாக்குப்பையைக் கம்பியில் தூக்கி விட்டால், அது கம்பி வழியாக கீழே ஆழியாறு சென்றுவிடும். இந்தவழியை பல ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்துள்ளது. இப்போதும் கூட , ஊமாண்டு முடக்கு பகுதியில், இரண்டு பெரிய தூண்கள் இருப்பதை பார்க்க முடியும்.



                                  இந்த உலகில் தண்ணீருக்கு அடுத்தபடியாக, அதிகப்படியாக மக்கள் குடிப்பது தேநீர்தான். ஆனால், தேயிலை தோட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள், அங்கே நிலவும்  கடும் மழையிலும்,  கடும் குளிரிலும், அட்டைப்பூச்சி கடிகளிலும், வனவிலங்குகளின் பேராபத்திற்கு இடையே, கடும் உழைப்பினால்தான், நாம் பருகிற  தேநீர், நமது கைகளுக்கு வருகிறது. 



                                       வால்பாறைக்கு அடுத்த முறை நீங்கள் செல்லும்போது  இப்போது,    நீங்கள் படித்த ஒவ்வென்றும்  நினைவில் வைத்து கடந்து செல்லுங்கள். வால்பாறை காட்டுயிர்களுக்கு சொந்தமானது. இப்போது சொல்லுங்கள் உங்கள் வீட்டிற்கு யானை, புலி வருகிறதா? காட்டுயிர்களின் காடுகளில் நாம் இருக்கிறோமா? 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies