கும்கி யானைகளின் மீது செஸ் போர்டு வடிவ போர்வைப்போல் போத்திய பிளக்ஸ் கவர்: வன ஆர்வலர்கள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஆகஸ்ட் 10.,
பொள்ளாச்சி அடுத்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட டாப்சிலிப் பகுதியில் கும்கி யானைகளின் மீது செஸ் போர்டு வடிவ போர்வைப்போல் போத்திய பிளக்ஸ் கவர்.
இயற்கையோடு இணைந்து வாழும் மலைவாழ் மக்கள் தினமான சர்வதேச பழங்குடிகள் தினம் 1982-ம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 9ம் தேதி கொண்டாடப்படுகிறது. சர்வதேச பழங்குடிகள் தினம் 2022 நேற்று டாப்சிலிப் பகுதியில் கொண்டாடப்பட்டது. மேலும், செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு நாளான நேற்று ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள், டாப்ஸ்லிப் பகுதியில் உள்ள வன அலுவலகத்தில் செஸ் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை, ஆனைமலை புலிகள் காப்பகம் துணை இயக்குநர் கணேசன் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், பிளாஸ்டிக் கவரால் ஆன பிளக்ஸ் கவரை கும்கி யானைகள் மீது போர்வை போல் போர்த்தி நிகழ்ச்சி நடைபெற்றது. யானைகளை தயார் செய்யும் பொழுது பிளக்ஸ் பிளாஸ்டிக் கவர்களையும், அதில் வெளிப்படுகிற வாசனையையும் கண்டு இரண்டு கும்கி யானைகள் பயத்தால் மிரண்டு அந்தக் கூட்டத்திலிருந்து வனப்பகுதிக்குள் ஓடியது.
பின்னர் கும்கி யானைகளை பராமரிக்கும் பாகன்கள் யானைகளை சமாதானப்படுத்தி, கட்டாயப்படுத்திய நிலையில் அங்கு வைக்கப்பட்டுள்ள சதுரங்க பலகையை சுற்றிவர யானைகளை வனத்துறையினர் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் டாப்ஸ்லிப் பகுதியை சுற்றி பார்க்க வந்த சுற்றுலா பயணிகளிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், கும்கி யானைகளை கட்டாயப்படுத்தி, துன்புறுத்தி பிளாஸ்டிக் கவர்களை யானைகள் மீது போர்த்தி பலம்மிக்க கும்கி யானைகளை விளம்பர காட்சி பொருளாக்கி உள்ளனர் என்று வன ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, இந்திய வனச்சட்டம் 1972-பிரிவின் கீழ் இது தண்டனைக்குரியதாகும் என்றும், மேலும் வனப்பகுதிக்குள் உள்ள யானைகள் மீது பிளாஸ்டிக் பிளக்ஸ் பேனர்களை போர்த்தி, யானைகளை துன்புறுத்திய ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் மீது தமிழக அரசு துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வன ஆர்வலர்கள் தங்களின் ஆதங்கங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பரப்பி வருகின்றனர்.