தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று ஊட்டி வருகை: 5 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் பலத்த பாதுகாப்பு
நீலகிரி மாவட்டம், ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு நாளை மறுநாள் திங்கட்கிழமை மற்றும் 26 ஆம் தேதிகளில் நடக்கிறது.
இதில் பங்கேற்பதற்காகவும், ஒரு வார பயணமாகவும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மாலை நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வருகிறார்.
இதையடுத்து, இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு மதியம் 2 மணியளவில் கோவை விமான நிலையத்திற்கு வருகிறார். கோவை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக கார் மூலம் ஊட்டிக்கு பயணம் செய்கிறார். ஊட்டி உள்ள ராஜ்பவன் மாளிகையில் தங்குகிறார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை மறுநாள் காலை ராஜ்பவன் மாளிகையில் நடக்கிற துணைவேந்தர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.
இதைத் தொடர்ந்து ஊட்டியில் ஒருவாரம் தங்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 30-ஆம் தேதி மீண்டும் சென்னை திரும்புகிறார்.
கடந்த 19-ஆம் தேதி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மயிலாடுதுறை அருகே உள்ள தருமபுரம் ஆதீன விழாவில் பங்கேற்பதற்காக காரில் சென்றபோது, சாலையோரம் நின்றிருந்தவர்கள் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேபோல நீலகிரி வரும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து விமான நிலையம் முன்பு கருப்புகொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட போவதாக முற்போக்கு அமைப்புகள் அறிவித்திருந்தது.
இதையடுத்து, கோவை, நீலகிரி மாவட்டங்களில் தமிழக ஆளுநரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.
நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட 5 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில், கோவை மாநகர் மற்றும் புறநகரில் 2000 போலீசாரும், நீலகிரியில் 600 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும், விமான நிலையம், பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இதற்கிடையில், தமிழக ஆளுநரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புகொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்த தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட முற்போக்கு அமைப்புகள் தங்களது போராட்டதை வாபஸ் வாங்கியுள்ளது.
இதுபற்றி தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் கூறும்போது, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கருதி போலீசார், போராட்டத்திற்கு அனுமதி மறுத்து விட்டனர். இதன் காரணமாக நாங்கள் நடத்துவதாக இருந்த போராட்டத்தை வாபஸ் பெற்று கொள்வதாக தெரிவித்தார்.